×

காதல் விஷயத்தை வெளியே சொல்வதாக மிரட்டி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தாயின் 2வது கணவன், காதலனுக்கு வலை

பெரம்பூர்: பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் மாணவி, சாந்தகுமார் என்ற நபருடன் தலைமறைவானார். சிறுமியும் சாந்தகுமாரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த செம்பியம் போலீசார் கேரள மாநிலம், கொல்லம் பகுதியில் வைத்து சிறுமி மற்றும் காதலனை மீட்டனர். பின்னர், சிறுமியை செம்பியம் போலீசார் அவரது தாயிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்த தகவல் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் லலிதா என்பவருக்கு தெரிய வந்தது.

அவர் செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அம்பிகா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில், சிறுமியின் தாய் பல வருடங்களுக்கு முன்பே கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, அதன் பிறகு காட்வின் என்ற நபருடன் அவர் இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்து வருவதும், கடந்த 2021ம் ஆண்டு சிறுமி சாந்தகுமார் என்பவரை காதலிப்பதை அறிந்த காட்வின் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் வெளியே சொன்னால் உனது காதலை அம்மாவிடம் கூறி விடுவேன் என மிரட்டி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

இதை தொடர்ந்து, செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுமியின் தந்தையான காட்வின் மற்றும் சிறுமியின் காதலன் சாந்தகுமார் ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் சிறுமியின் தாய்க்கு ஏதாவது தொடர்பு உள்ளதா என்று கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காதல் விஷயத்தை வெளியே சொல்வதாக மிரட்டி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தாயின் 2வது கணவன், காதலனுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Perambur ,Perampur ,
× RELATED பெரம்பூர் ரமணா நகர் பகுதியில் மெட்ரோ...